Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் நாளை முதல் 12ந்தேதி வரை பல்வேறு இடங்களில் ஜமாபந்தி

திருவாரூர், ஜூன் 8: திருவாருர் மாவட்டகலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) நாளை (9ந் தேதி) முதல் துவங்கி 12ந்தேதி வரை அந்தந்த வட்டத்திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.

அதன்படி நாளை முதல் 11ந் தேதி வரையில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கலெக்டர் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், திருவாரூர் வட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தலைமையிலும் நடைபெற உள்ளது.

மேலும் நாளை முதல் 12ந்தேதி வரையில் மன்னார்குடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தங்களது வட்டத்திற்குரிய வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.