Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வலங்கைமான் உத்தாணி பகுதியில் குடிபோதையில் கணவர் தாக்கியதில் மனைவி பலி?

வலங்கைமான், ஜூலை 6: வலங்கைமான் அடுத்த உத்தாணி பகுதியில் குடிபோதையில் கூலி தொழிலாளி தாக்கியதில், சிகிச்சை பலனின்றி பெண் பலியான சம்பவம் குறித்து, வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அன்னுக்குடி ஊராட்சி உத்தாணி பகுதியில் மாயவரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் இரண்டு மகன்கள் உடன் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து உள்ளனர்.

மது போதைக்கு அடிமையான லட்சுமணன் அவ்வப்போது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் லட்சுமணன், தனது மனைவி விஜயலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து விஜயலட்சுமி முத்துப்பேட்டையில் உள்ள தனது தந்தையிடம் கணவர் அடித்து விட்டதாக கூறியுள்ளார். பின்னர் விஜயலட்சுமி தனது தந்தையுடன் சென்று திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி நேற்று அதிகாலை உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நன்னிலம் டிஎஸ்பி முத்துக்குமரன் கூறுகையில், விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது விஜயலட்சுமி கணவர் லட்சுமணன் தாக்கியதால் உயிரிழந்தாரா? என்பது விஜயலட்சுமியின் உடற்கூறு ஆய்விற்கு பிறகு தெரியவரும் என கூறினார்.