Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூத்தாநல்லூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா

மன்னார்குடி , ஜூன். 29: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த மரக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் எஸ்ஐக்கள் பாண்டியம்மாள், சேகர், எஸ்எஸ்ஐ பூபதி, ஏட்டு கவியழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் மரக்கடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மரக்கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், பிடிபட்டவர்களில் ஒருவர், ஆர்ஜி தோட்டத் தெருவை சேர்ந்த சபரி ராஜன்(27) என்பதும், மற்றொருவர் கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடியை சேர்ந்த விக்டர் (24) என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதில், சபரிராஜன் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார். விக்டர் சில்லறை விற்பனைக்காக சபரிநாதனிடம் கஞ்சா வாங்க வந்த போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து சபரிராஜன் வீட்டில் இருந்து சில்லறை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படிருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து சபரிராஜன், விக்டர் ஆகியோரை கைது செய்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி சதீஷ்குமார் கூறியது, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்.