ரூ.20 லட்சம் மதிப்பில் யாகசாலை பொருட்கள் எம்எல்ஏ மனைவி வழங்கினார் ரிஷபேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா
செங்கம், ஜன.23: ரிஷபேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் யாகசாலை பொருட்களை எம்எல்ஏ மனைவி வழங்கினார். செங்கம் நகரில் 1,600 ஆண்டுகள் பழமையான 18 சித்தர்களின் முதன்மை சித்தரான அகத்தியரின் ஜீவசமாதி உடைய அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணி செய்து, குடமுழுக்கு செய்ய செங்கம் எம்எம்ஏ மு.பெ.கிரியின் தொடர் முயற்சியின் காரணமாக, தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதி வழங்கி திருப்பணிகள் நிறைவுபெற்றது. வரும் 28ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதையொட்டி தஞ்சாவூர் அரண்மனை முகப்பு வாயிலுடன், யாகசாலை மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 110 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் யாகசாலையில் வேள்விக்கு, ரூ.20 லட்சம் மதிப்பிலான பூஜை பொருட்கள் அனைத்தையும், எம்எல்ஏ மு.பெ.கிரி சார்பில் அவரது மனைவி பாரதி கிரி, சென்னையிலிருந்து கொண்டு வந்து நேற்று கோயிலுக்கு வழங்கினார். அப்போது நகர திமுக செயலாளரும், அறங்காவலர் குழு தலைவருமான அன்பழகன், அறங்காவலர் குழு தர் உட்பட பலர் உடன் இருந்தனர்.


