Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வடமதுரை மின் வாரிய அலுவலக வளாகத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா?

ஊத்துக்கோட்டை, பிப்.5: வடமதுரை கிராமத்தில் மின்வாரிய அலுவலக வளாகத்தில் பழுதடைந்த மின் வாரிய ஊழியர்களின் தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா என நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பில் மின் வாரிய ஊழியர்கள் உள்ளனர். எனவே, அவற்றை சீரமைத்தோ அல்லது அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் 1969ம் ஆண்டு 3 ஏக்கர் பரப்பளவில் மின்சார துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை என ஆரம்பத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து வடமதுரை மின்வாரியத்தில் பணியாற்றுவதற்கு சிரமப்பட்டு வந்தனர். இதனால், ஊழியர்களுக்காக மின்வாரியம் அருகிலேயே ஒரு குடியிருப்பில் 2 வீடுகள் என 10 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதில், தங்கி ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், அந்த தொகுப்பு வீடுகளை சுற்றி செடி-கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து, வீடுகளுக்குள் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் புகுந்தது. இதனால், அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஊழியர்கள் வீடுகளை காலி செய்து கொண்டு வாடகை வீடுகளுக்கு சென்று விட்டனர். அதன்பிறகு தற்போது 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வடமதுரை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் வாடகை வீடுகளில் தான் வசித்து வருகிறார்கள். எனவே, மின்வாரிய ஊழியர்களின் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சுற்றியுள்ள புதர்களை அகற்றி வர்ணம் தீட்டி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது இவைகளை அகற்றி விட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: வடமதுரை மின்வாரியத்தில் பணியாற்றும் எங்களுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இந்த தொகுப்பு வீடுகள் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக முட்புதர்கள் சூழ்ந்து பழுதடைந்து கிடக்கிறது. இதனால், நாங்கள் பெரியபாளையம், வெங்கல், கன்னிகைப்பேர் போன்ற பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். மேலும், மின்வாரிய அலுவலகத்தில் பழுது என்றால் நீண்ட தூரத்தில் இருந்து வரவேண்டியுள்ளது. எனவே, பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பதை விட புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்’ என்றனர்.