Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டையில் பைக் நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிலையம்: தனியாக பார்க்கிங் அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் பைக் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. எனவே இங்கு தனியாக பைக் பார்க்கிங் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனைச் சுற்றி அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், மேலக்கரமனூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் தாசுகுப்பம், சுருட்டப்பள்ளி என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் சென்னை, செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர் என பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் தங்கள் கிராமங்களில் இருந்து பைக்கில் வந்து ஊத்துக்கோட்டையில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிலும், பஸ் நிலையத்திலும் தங்கள் பைக்குகளை நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள்.

இதேபோல் கிராமங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஊத்துக்கோட்டையில் உள்ள பஜார் பகுதிகளில் தங்கள் பைக்குகளை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைகளில் பொருட்கள் வாங்கச் செல்கின்றனர். ஊத்துக்கோட்டை பஜார் பகுதி சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பைக்குகள் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் இவ்வழியாகச் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் காவல் துறையினர் பைக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். எனவே ஊத்துக்கோட்டையில் பைக் பார்க்கிங் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.