Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி அருகே 15 நாட்களாக ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருத்தணி, ஜூன் 2: திருத்தணி அருகே கடந்த 15 நாட்களாக ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்த சம்பவம் நேற்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் ஊராட்சி தெக்களூர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்ததில் 5 நாட்களாக மின்தடை நிலவியது. மின்வாரிய ஊழியர்கள் புதிய கம்பங்கள் அமைத்து மின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இருப்பினும் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதடைந்து 15 நாட்களாக குடிநீர் சேவை தடைப்பட்டுள்ளது‌.

இதனால், கடந்த வாரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக டிராக்டரில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிக அளவில் இருப்பதால் குறைந்த அளவில் மட்டுமே டிராக்டரில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் குடிநீருக்கு கிராம பெண்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.பழுதடைந்த ஆழ்துளை கிணறு மின் மோட்டார் சரி செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் குடிநீர் பற்றாக்குறை தீவிரமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருத்தணி பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் தெக்களூர் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த வாரம் சாலை மறியலில் ஈடுபட்டபோது தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதுவரை குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றும், நிரந்தர தீர்வு எடுக்கும் வரை மறியல் போராட்டத்தை விட மாட்டோம் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து போலீசார் அதிரடியாக பெண்கள் மற்றும் கிராம மக்களை சுற்றி வளைத்து கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.

குடிநீருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்து செய்ததைக் கண்டித்து போலீஸ் வாகனங்களை வழிமறித்து கிராம பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக போலீசார் விடுவித்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலந்து சென்றனர்.

குடிநீர் கேட்டு சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்களை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் திருத்தணி பகுதியில் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.