பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம்
தேனி, நவ. 15: பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமென தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும், அதிக மகசூலை பெறவும் விவசாயிகள் உரங்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு வகை பயிருக்கும் ஒரு வகை சத்து அதிகளவு தேவைப்படுவதால் உரம் பயன்பாடு விவசாயிகளுக்கு சவாலான விஷயமாக மாறி உள்ளது.
ஒவ்வொரு வகை மண்ணிலும் சில சத்துக்கள் அதிகமாகவும், சில குறைவாகவும் காணப்படும். இதில் எந்த சத்து குறைவாக உள்ளது என்று கண்டறிந்து உரமிட வேண்டும். பயிரில் காணப்படும் அறிகுறிகளை கொண்டு சத்து குறைபாட்டை கண்டறிவது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் குறிப்பிட்ட விகித அளவுகளில் தேவைப்படுகின்றன. இதுவே சமச்சீர் கூட்டம் எனப்படுகிறது.
மண்ணில் தழைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும் போது பயிரின் முதிர்ந்த இலைகளில் உள்ள தழைச்சத்து இளம் இலைகளுக்கு எளிதில் நகர்ந்து சென்று விடுகிறது. எனவே, முழு வளர்ச்சி அடைந்த செடிகளில் ஒரே நேரத்தில் இளம் இலைகள் வெளிர் பழுப்பு நிறத்திலும், நடுப்பகுதி இலைகள் வெளிர் மஞ்சள்-வெளிர் பழுப்பு நிறத்திற்கு மாறி விடும்.
சாம்பல் சத்து குறைபாடுள்ள பயிரில் இடைக்கணுக்கள் குட்டையாக குறுகி காணப்படுவதுடன், பசுமை இழந்து விடும். சுண்ணாம்பு சத்து குறைபாடு உள்ள பயிர் வளர்ச்சி குன்றி குட்டையாக தடித்த தண்டுகளுடன் காணப்படும். இந்த அறிகுறிகளைக் கொண்டு எவ்வகை சத்து குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்து அவ்வகை சத்தை வழங்கும் உரங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.