சென்டர் மீடியனில் வேன் மோதி டிரைவர் பலி
நத்தம், நவ.13: திண்டுக்கல் அருகே தோட்டனூத்து பாத்திமா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டோ (42). திண்டுக்கல்லில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள சேக்கிபட்டிக்கு பாலை விற்பனைக்கு எடுத்து சென்றார். அங்கு பாலை இறக்கிய பின் மீண்டும் திண்டுக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தார்.
நத்தம் அப்பாஸ்புரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் உள்ள தடுப்பில் வேன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ஜார்ஜ் பெர்ணான்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் நத்தம் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரது உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.