சின்னமனூர், ஆக. 21: தேனி அருகே, ஜங்கால்பட்டியில் உள்ள கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தர்மர் மகன் சுரேஷ் (29). பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுனர். இவரது லாரியில் கிளீனராக நெப்போலியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணியளவில் இருவரும் தேனியிலிருந்து கம்பத்துக்கு லாரியில் சென்று கொண்டிருந்தனர். சீலையம்பட்டி பூ மார்க்கெட் அருகே, கம்பம் புதுப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் (56) என்பவர் ஓட்டி வந்த சரக்கு லாரி டேங்கர் லாரி மீது மோதியது.
இதில், இரண்டு லாரிகளின் முன்பகுதி சேதமடைந்தது. லாரியின் இடிபாடுகளில் சிக்கி சுரேஷ், நெப்போலியன் பலத்த காயமடைந்தனர். ராஜாங்கம் காயமின்றி தப்பினார். அக்கம்பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சிவசம்பு வழக்குப்பதிந்து இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.



