Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடமலை-மயிலை ஒன்றியத்தில் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

வருசநாடு, ஜூலை 17: கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர், எட்டப்பராஜபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, ஒத்தகுடிசை, வருசநாடு, மூலக்கடை, செல்வராஜபுரம், குமணன்தொழு, கோரையூத்து உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட ஏக்கர் தோட்ட நிலங்களில் நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலக்கடலைச் செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராகி வரும் நிலையில், அவற்றை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் நரிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அவை பயிர்களைச் சேதப்படுத்தாமல் தடுக்க விவசாயிகள் இரவு பகலாக நிலங்களில் தங்கி இருந்து காவல் காத்து வருகின்றனர்.

விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இன்னும் சில நாட்களில் நிலக்கடலை அறுவடைப் பணிகள் முழுவீச்சில் தொடங்க உள்ளன. தற்போது உள்ளூர் சந்தைகளில் நிலக்கடலை ஒரு படி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. சந்தையில் நல்ல விலை கிடைப்பதாலும், இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருப்பதாலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’’எனத் தெரிவித்தனர்.