தேனி, ஆக. 5: தேனி மாவட்டம் பொதுவாக விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகள் அதிக அளவில் விளைகிறது. இங்கிருந்து காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த மார்க்கெட்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.
இதன்படி தேனியை அடுத்துள்ள கோட்டைப்பட்டி, அரண்மனைப்புதூர், பள்ளப்பட்டி, கொடுவிலார்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகளுடன் வாழை, தென்னை, கரும்பு போன்ற பாரம்பரியப் பயிர்ளும் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர், தற்போது சாம்பார் தட்டாங்காய் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட துவங்கியுள்ளனர். தேனி உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ தட்டாமங்காய். ரூ.20க்கு விற்பனையாவதால், குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது.
இதற்கிடையே கேரளாவில் சாம்பார் தட்டாங்காய்க்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்து தேனி பகுதி விவசாயிகள் அவற்றை சின்னமனூர் ஏல மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து நேரடியாகக் கேரளாவுக்கு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் தட்டங்காய்க்கு அதிக வரவேற்பு உள்ளதால், கேரள சந்தையில் ஒரு கிலோ ரூ.40க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இதன் காரணமாக கூடுதல் வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள இப்பகுதி விவசாயிகள், சாம்பார் தட்டங்காய் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர் .


