Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்டமனூர் அருகே குடிநீர் விநியோகிக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

வருசநாடு, ஜூன் 2: கண்டமனூர் அருகே குடிநீர் விநியோக்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு மூலவைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியான காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

மேலும் மூலவைகை ஆறு அருகே உறைக்கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் வறட்சியான சூழல் நிலவி வருவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக ராஜேந்திராநகர் பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நேற்று, வருசநாடு-தேனி சாலையில், காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த கண்டமனூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடுவோம் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.