Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்டா மாவட்டங்களில் இதுவரை கொத்தடிமைகளாக இருந்த ஆந்திர மாநில சிறுவர்கள் 10 பேர் மீட்பு

தஞ்சாவூர், ஜூலை 3: டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களில் வாத்து மேய்க்க ஆந்திர மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களில் கொத்தடிமையாக இருக்கும் சிறுவர்களை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடுகள், வாத்து மேய்ப்பதற்காக சிலர், ஏழ்மையான குடும்பத்தில் உள்ளவர்களை கொத்தடிமைகளாக அழைத்து வரும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடிகளிலும் அறுவடை பணி முடிவடைந்த வயல்களில் அடுத்த நடவு பணி தொடங்குவதற்கு முன்பாக வாத்து, ஆடுகள் மேய்ச்சலுக்காக விடப்படும்.

வயல்களில் வாத்து மேய்க்கும் தொழில் என்பது மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாயத்திற்கு பெரிதும் உதவும் ஒரு தொழிலாகும். வாத்துகளின் எச்சங்கள் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது. நெல் அறுவடைக்கு பிறகு வயலில் மீதமுள்ள நெல் மணிகள், நத்தை, நண்டு, புழு மற்றும் சிறு பூச்சிகளை வாத்துகள் உண வாக உட்கொள்கின்றன. இதனால் அடுத்த சாகுபடிக்கு தீங்கு விளை விக்கும் பூச்சிகள் அழிகின்றன. வாத்துகள் வயலில் அலைந்து திரிவதால் தேவையில்லாத களைகள் அழிக்கப்படுகின்றன. தற்போது அறுவடை முடிந்த வயல்களில் வாத்து மேய்ப்பதற்காக ஆந்திராவில் இருந்து தொழிலாளர்களை குடும்பத்துடன் டெல்டா மாவட்டங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவர்களில் சிறுவர்களும் உள்ளனர்.

இவர்கள் பலர் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி கொத்தடிமைகளாக இருக்கும் சிறுவர்களை மீட்டு மறு வாழ்வு அளிக்கும் பணியிலும் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கொத்தடிமை மீட்பாளர்கள் கூறும்போது; அவசர தேவைகளுக்காக பிறரிடம் முன்பணம் வாங்குதல், நீண்ட நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுதல், குறைந்தபட்ச ஊதியம், குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்படாத நிலை, உடல்சார்ந்த வன்முறைகள், உதவ யாருமில்லாத உணர்வு என கொத்தடிமை முறைகள் உள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வயல்கள், தோப்புகளில் வாத்து மேய்க்க கொத்தடிமை சிறுவர்கள், குடும்பத்தினர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறார்கள்.

அதுவும் ஆந்திர மாநிலத்தில் இருந்து குடும்பத்துடன் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதில் சிறுவர்களும் உள்ளனர். இந்த சிறுவர்களை கண்டறிந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 10 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.