Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிவகங்கையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை வேறு ஊருக்கு மாற்ற எதிர்ப்பு

சிவகங்கை, ஜூலை 27: சிவகங்கை அரசு அருங்காட்சிகத்தை வேறு ஊருக்கு மாற்றாமல் சிவகங்கையிலேயே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் சிவன்கோவில் அருகில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 28 ஆண்டுகளாக அருகங்காட்சியகம் இங்கு செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டுகள், சிலைகள், மண்பாண்ட பொருட்கள், பழமையான ஆயுதங்கள் உள்ளிட்ட தொல்லியல் சார்ந்த பொருட்கள் உள்ளன. இவைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் பார்வையிட்டு செல்வர். அருங்காட்சியகம் இருப்பது வாடகை கட்டிடமாகும்.

இந்நிலையில் இக்கட்டிடம் பழுதாகி உள்ளதால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. ஆனால் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் இருந்து 22 கி.மீ தூரமுள்ள திருப்புவனம் அருகே திருமாஞ்சோலையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘சிவகங்கை நகரில் இருந்தால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து அருங்காட்சியகத்தை காண ஏதுவாக இருக்கும். எனவே வேறு ஊருக்கு மாற்றம் செய்யக்கூடாது.

புதிய கட்டிடம் கட்ட சிவகங்கை நகரை ஒட்டியுள்ள பகுதி அல்லது கலெக்டர் அலுவலகப் பகுதியிலேயே இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரை கலெக்டர் அலுவலகத்தில் அல்லது பழைய மருத்துவமனையில் காலியாக உள்ள கட்டிடங்களில் அருங்காட்சியகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.