கீழக்கரை, ஆக.28: கீழக்கரை அருகே வாகன சோதனையில் சிக்கிய 215 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கீழக்கரை காஞ்சிரங்குடி கோரைக்கூட்டம் விலக்கு ரோடு பகுதியில், திருப்புல்லாணி எஸ்ஐ குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருட்கள் வாகனத்தில் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த வழியே வந்த திருச்சி பதிவெண் கொண்ட 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் இருந்த சாக்கு மூட்டைகள், அதில் எழுதப்பட்டிருந்த பெயர், முகவரி குறித்து வாகனத்தில் வந்தோரிடம் போலீசார் விசாரித்தனர். இதன் பின் வாகனத்தில் இருந்த 23 மூட்டைகளை பிரித்து பார்த்தபோது புகையிலை, மித போதைப் பொருள் பாக்கெட்கள் என தெரிந்தது. புகையிலை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்ய நாமக்கல்லில் இருந்து கொண்டு வந்ததாக வாகனத்தில் வந்த காஞ்சிரங்குடியைச் சேர்ந்த சர்புதீன் தெரிவித்தார். மேலும் வாகனத்தில் கொண்டு வந்த ரூ.1.68 லட்சம் மதிப்பிலான 215 கிலோ புகையிலை, போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக எஸ்ஐ குமார் புகாரின் பேரில் நாமக்கல் மாவட்டம் நாமகிரி பேட்டையில் வசிக்கும் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி சர்புதீன் (45), காஞ்சிரங்குடியைச் சேர்ந்த சுல்தான் கனி (36) ஆகியோர் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



