மானாமதுரை, ஆக.20: மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் கணித ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மானாமதுரை அருகே மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்தவில்லை என பெற்றோர்கள் குற்றம்சாட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை மாற்றம் செய்யக் கோரி பல்வேறு மனுக்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 3ம் தேதியன்று மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவர்களின் கல்வி நலன் கருதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து வட்டாச்சியர் கிருஷ்ண குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்பு ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றும் வரை விடுப்பில் செல்ல அறிவுறுத்தியதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.



