காரைக்குடி, ஆக.19: காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள நாடகமேடையில் ரத்தகரை மற்றும் வேஷ்டி, சட்டையில் ரத்தகரையுடன் கிடந்த நிலையில் கொலை செய்யப்பட்டு உடலை வேறு எங்கும் கொண்டு சென்று விட்டார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்குடி கழனிவாசல் பகுதியில் இரட்டைகுளம் முனியய்யா கோயில் உள்ளது. இக்கோயில் அருகே உள்ள நாடகமேடையில் ரத்தம் வடிந்த நிலையில் ஆங்காங்கே ரத்தகரை மற்றும் ரத்தகரையுடன் வேஷ்டி, சட்டை மற்றும் உடைந்த நிலையில் மனிதபல் கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். அங்குள்ள குளத்தில் தீயணைப்பு துறையினர் இறங்கி சோதனை செய்தனர். இதில் எதுவும் கிடைக்க வில்லை. சிவகங்கையில் இருந்து மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நாடகமடையில் இருந்து சிறிது தூரம் சென்ற மோப்பநாய் பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது. ஏஎஸ்பி ஆசிஸ் புனியா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் குடிபோதையில் மேல்தாடை உடைந்த நிலையில் படுத்து கிடந்த ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யாரேனும் கொலை செய்யப்பட்டு உடல் வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதா எனவும், அங்குள்ள காட்டு பகுதியில் உடல் வீசப்பட்டதா எனவும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



