Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மானாமதுரை அருகே வாலிபர் கொலையில் சகோதரர் கைது

மானாமதுரை, டிச.17: மானாமதுரை அருேக பெரியகோட்டையை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது இறந்தவரை அண்ணனே கொலை செய்தது தெரியவந்துள்ளது. திருப்பாச்சேத்தி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி முத்துக்காமாட்சி(50). இவருக்கு மூன்று மகன்கள். தற்போது மானாமதுரை அருகே பெரியகோட்டையில் வசித்து வருகிறார். முத்துக்காமாட்சியின் இளைய மகன் லோகேஷ்குமார்(25) விறகு வெட்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பெரியகோட்டை பிள்ளையார் கோயில் பின்புறம் ேலாகேஷ்குமார் பிணமாக கிடந்துள்ளார். புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க துவங்கினர். விசாரணையில் லோகேஷ்குமாரை அவரது உடன்பிறந்த சகோதரர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது, இறந்த லோகேஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள் மாறியதால் அவரை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிக்கவேண்டும் என்று கூறியதால் அவரது அண்ணன் பிரகாஷ்(29) கண்மாய் கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கிருந்து லோகேஷ்குமார் தப்பியோட முயன்றதால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தம்பியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். கொலை செய்த பிரகாஷ், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்துள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் ேபானதால், வேலையை விட்டு விட்டு தாயை கவனித்துக்கொண்டு இருந்த நிலையில் தம்பியை கொலை செய்துள்ளார் என்றனர்.