Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40.27 கோடியில் கட்டிய அணை: ப.சிதம்பரம் எம்பி பார்வையிடல்

திருப்புவனம்,ஜன.1: திருப்புவனம் புதூர்-மடப்புரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40.27 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.22ம் தேதி சிவகங்கையில் நடந்த விழாவில் துவக்கி வைத்தார். இந்த அணையால் கானூர், கல்லூரணி, பச்சேரி, பெத்தானேந்தல், மிக்கேல்பட்டினம், ஆறு கண்மாய்களும், பழையனூர் பகுதியில் 13 கண்மாய்களும் என மொத்தம் 19 கண்மாய்கள் பாசன வசதியும், சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.

ஆறு பள்ளமாக தாழ்ந்து இருப்பதால் கால்வாயில் தண்ணீர் செல்ல இயலவில்லை. அதனால் வலது மற்றும் இடதுபிரதான கால்வாய்களும் பிரியும் இடத்தில் வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அணை கட்டப்படும் என அறிவித்தார்.

இந்த அணைகட்ட ரூ.40.27 கோடி நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. அணையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டியதால் திருப்புவனம் குடியிருப்புப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கட்டப்பட்டுள்ள அணையை நேற்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. பார்வையிட்டார். அவருடன் செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், பச்சேரி சி.ஆர்.சுந்தரராஜன், மாவட்டத்தலைவர் சஞ்சய், நகர் காங்கிரஸ் தலைவர் நடராஜன் உடன் சென்றனர்.