Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலத்தில் நடந்த தொழிற்தேர்வில் முறைகேடு: மாணவர்களிடம் பணம் பெற்று சொல்லி கொடுத்த ஆசிரியர்கள்

சேலம், ஜூலை 28: மேட்டூர் அரசு ஐடிஐயில் நடந்த அகில இந்திய தொழிற்தேர்வில் மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் விடைகளை சொல்லிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் அரசு மற்றும் தனியார் ஐடிஐகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். ஐடிஐ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல், தனித்தேர்வர்களும் தேசிய தொழிற்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அகில இந்திய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அகில இந்திய தொழிற்பழகுநர் தேர்வை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேர்வு நடந்தது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கோரிமேடு அரசு ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை அரசு பழங்குடியினர் ஐடிஐ உள்ளிட்ட 6 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐடிஐயில் தேர்வு எழுதினர். இதற்கிடையே, மேட்டூர் அரசு ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்ற மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது. தேர்வு நேரத்தில் அரசு ஐடிஐ ஆசிரியர்கள் தேர்வு அறைக்கு உள்ளே சென்று, மாணவர்களுக்கு உதவிடும் வீடியோ ஒன்று தற்போது வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மேட்டூர் அரசு ஐடிஐயில் அகில இந்திய தொழிற்தேர்வில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக, தேர்வு நடைபெற்ற சமயத்தில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டு, ஆசிரியர்கள் நேரடியாக சென்று மாணவர்களுக்கு விடை எழுத உதவுவதுபோன்ற வீடியோ வௌியாகி உள்ளது. வௌியில் இருந்து மேற்பார்வையாளராக வரும் நபர்களுக்கு பணம் தர வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாணவர்களிடமும் தலா ரூ.500 கையூட்டு பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது. அகில இந்திய தொழிற்தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.