Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்

சேலம், ஜன.12: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரத்தை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ரூ.3,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேட்டி-சேலை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் கடந்த 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 10,87,256 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10,88,238 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1765 ரேஷன் கடைகளிலும் கடந்த 4 நாட்களில் 9.20 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர்கள் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று அவர்களின் கைரேகைகளை பெற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரத்தை வழங்கி வருகின்றனர்.

இதனை பெற்று கொண்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் கடை பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ராஜ்குமார் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 4நாளில் 9லட்சத்து 20ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 85 சதவீதம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள கார்டுதாரர்களுக்கு நாளைக்குள் வழங்கப்பட்டு விடும். மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். என்றார்.