கடைகளில் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தினால் நடவடிக்கை: வருவாய் துறையினர் எச்சரிக்கை
பழநி, நவ. 14: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான தற்காலிக உணவு கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல கடைகளில் வணிக சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பழநி வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது: அடிவார கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழநி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள், பேக்கரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.