Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையோர காய்கறி கடையை தடுத்து உழவர் சந்தையை மேம்படுத்த வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

காரைக்குடி, டிச.13: காரைக்குடியில் உழவர்சந்தைக்கு வராமல் ஆங்காங்கே விவசாயிகள் சாலையோரங்களில் காய்கறி கடைகள் போட்டுள்ளதால் உழவர்சந்தை கடைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. காரைக்குடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த 2000ம் ஆண்டு உழவர்சந்தை முன்னாள் முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது. இங்கு 58க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டு செயல் இழந்து கிடந்தது. சிறு,குறு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் இங்கு கொண்டுவந்து இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பொருட்களுக்கு வெளிமார்க்கெட் மொத்த விலையில் இருந்து 20 சதவீதம் அதிகமாகவும், உள்ளூர் விலையில் இருந்து 15 சதவீதம் குறைவாக தினமும் விலை நிர்ணயம் செய்து ஒவ்வொரு கடையின் முன்பு விலை எழுதி தொங்கவிடப்பட்டு இருக்கும்.

விளைபொருட்களை அரசு பஸ்களில் காலை நேரத்தில் இலவசமாக கொண்டு வரலாம். உழவர்சந்தைகளில் குடிநீர், கழிப்பறை மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்க கட்டிடம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது. இங்கு விவசாயிகள் தவிர சுய உதவிகுழுவினர், அம்மா பண்ணை மகளிர்குழு, நேரடி விவசாயிகளில் தனிநபர், கூட்டு பட்டாதாரர்கள் கடைவைத்து நடத்தலாம். மக்களும் பிரஸ்சான காய்கறிகளை நியாயமான விலையில் வாங்கி வந்தனர். இந்நிலையில் கூடுதல் லாபத்திற்காக நகர் பகுதி முழுவதும் கடைகள் போடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் உழவர் சந்தை மிகக்குறைந்த அளவிலான கடைகளுடன் உழவர்சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. மாநகரட்சி சார்பில் சாலையோர காய்கறி கடைகள் போடுவதை தடுக்க வேண்டும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் புதுபொலிவுடன் உழவர் சந்தையை செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.