ராமநாதபுரம்,ஜன.6: ராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் கடந்த டிச.26 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இச்சங்கத்தினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளிகளுக்கு செல்லாமல் மாவட்ட தலைநகரங்களில் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். ராமநாதபுரம் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
+


