தொண்டி, ஜூலை 31: தொண்டி அருகே நம்புதாளையில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சிக்கு தினைக்காத்தான்வயல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. சுழற்சி முறையில் கிழக்கு தெரு, மேற்கு தெரு, படையாட்சி தெரு என பல்வேறு பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் மேற்கு பகுதிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தண்ணீர் வழங்கியுள்ளனர். மீண்டும் நேற்று வழங்கிய போது மூன்று குடம் தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் தண்ணீர் வழங்குபவரிடம் நாளை தண்ணீரை முறையாக வழங்கவில்லை என்றால் சாலை மறியல் செய்வோம் என கூறி கலைந்து சென்றனர். இது குறித்து ருக்காயி கூறியது, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை. நேற்றும் சரியாக வழங்காததால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அலுவலர் போன் சுவிச் ஆப்பில் உள்ளது. அலுவலகத்தில் யாரும் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியவில்லை. எங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.



