திருப்புவனம், ஆக.26: மதுரை சிலைமான் அருகே கல்மேட்டை சேர்ந்தவர் மயில்சாமி(50). இவர் 150க்கும் மேற்பட்ட கிடை மாடுகள் வைத்து மாங்குடி பகுதியில் மேய்த்து இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் கிடை அமர்த்தி வந்துள்ளார். இவருடன் திருப்பாச்சேத்தி அருகே சின்ன ஆவரங்காட்டை சேர்ந்த முத்துக்குமார்(29) என்பவரும் மாடு மேய்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலைநேரத்தில் மாங்குடி வயல்வெளியில் மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்து கிடை மாடுகள் மேய்ந்துள்ளன. இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ராமரின் மகன்களான அய்யங்காளை(30), ராஜா(28) மற்றும் ராமர் ஆகியோர் மயில்சாமி, முத்துக்குமார் இருவரையும் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயில்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராமர், அய்யங்காளை, ராஜா மூவரையும் திருப்புவனம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



