சாயல்குடி,ஜன.26: கடலாடியில் பிரதமர் மோடி பொங்கல் நிகழ்ச்சியை முன்னிட்டு 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சின்னமாடு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு என 3 பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. கடலாடி, முதுகுளத்துார் சாலையில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 58 வண்டிகள் கலந்து கொண்டது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் பங்கேற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் ஈராட்சி வீரபாண்டியின் மாடுகள் முதலிடமும், குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணுவின் மாடுகள் இரண்டாம் இடமும், கடலாடி சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது.
29 வண்டிகள் பங்கேற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயம் இரண்டு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல் சுற்றில் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதலிடத்தையும். எம்.கரிசல்குளம் சொக்கலிங்க வாசுதேவனின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், கயத்தார் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. இரண்டாவது சுற்றில் பாப்பாகுளம் ஜெகநாதனின் மாடுகள் முதலிடத்தையும், கம்பத்துபட்டி தினேஷ்பாண்டி மாடுகள் இரண்டாம் இடத்தையும், சிவிலார்பட்டி கோவிந்தராஜ் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. 16 வண்டிகள் பங்கேற்ற தட்டான்சிட்டு போட்டியில் புதுப்பட்டி கணபதியின் மாடுகள் முதலிடத்தையும், தேனி பொம்மியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், சாயல்குடி மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது.


