மானாமதுரை, ஆக. 5: சர்க்கஸ் தொழிலாளியின் மகளின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததாக கூறி தாலுகா அலுவலகத்தில் இறந்தவரின் உடலுடன் காத்திருந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை அருகே சன்னதி புதுக்குளம் கிராமத்தில் சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு திமுக அரசு சார்பில் 50 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 23 பேருக்கு அரசு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தொழிலாளர்கள் பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று சர்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தி விட்டு இங்கு வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜு, ராணி தம்பதியின் மகளான ராஜகுமாரி(25) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இறந்த ராஜகுமாரியின் உடலை சன்னதிபுதுக்குளம் உள்ள புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்ய வந்தபோது இங்கே அடக்கம் செய்யக்கூடாது என அந்த கிராமத்தினர் தடுத்துள்ளனர். வேறு வழியின்றி மகளின் உடலை அடக்கம் இடம் வழங்க கோரி, பிணத்துடன் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே மாரியம்மன் நகரில் எதிரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யுமாறும் நிரந்தரமாக வேறு இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
