Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை 1356 மையங்கள் மூலம் 1.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

புதுக்கோட்டை, ஜூன் 29: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 1.16 லட்சம் குழந்தைகளுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் துவக்கி வைத்தார். இம்முகாமில், அமைச்சர் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, அமைச்சர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்கள் உள்ளிட்ட 1,356 மையங்களில், 1.16 லட்சம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும் வகையில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாமினை நடத்திட சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வித்துறை, ரோட்டரி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட 5,596-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். மேலும், இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகள், வயல்வெளி குடியிருப்புகள், சாலையோர குடியிருப்புகள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், பேருந்து நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முகாமின் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி, இளம்பிள்ளை வாத நோயை முற்றிலுமாகத் தடுத்து, குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், இணை இயக்குனர் (பொது சுகாதாரம் சென்னை) சதீஷ் ராகவன், மாவட்ட சுகாதார அலுவலர் ஹேம் சந்த் காந்தி, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.