பெரம்பலூர், ஆக. 21: பெரம்பலூரில் சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-12ம் தேதி சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில், சர்வதேச இளைஞர் தினத்தைக் கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை 60 தினங்களுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் அறிவுறுத்தலின்படி, பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில்,பெரம்பலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி, பின்னர், மாவட்ட அளவில் நாட்டுப்புற கலைகளின் வாயிலாக எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்த நாட்டுப்புறக் கலைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ், பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு 12ஆம்தேதி தொடங்கி தொடர்ச்சியாக 08 நாட்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காக்களைச் சேர்ந்த 16 கிராமங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்து, சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கி, கிருஷ்ணா தியேட்டர், சங்குபேட்டை, காமராஜர் வளைவு, போக்குவரத்து சிக்னல் வழியாக ஆத்தூர் சாலையில் உள்ள தாலுக்கா அலுவலகத்தைச் சென்றடைந்தது. இந்தப் பேரணியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் செவிலியர் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு, எச்.ஐ.வி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், எச்.ஐ.வி விழிப்புணர்வு வாசகங்களை உரக்க முழங்கியவாறும் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரான மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கீதா, காசநோய் துணை இயக்குநர் டாக்டர் நெடுஞ்செழியன், மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மையம், பால்வினை நோய் மையம், ஏ.ஆர்.டி மையம் மற்றும் இரத்தவங்கி ஆலோசகர்கள், பெரம்பலூர் மாவட்ட எச்.ஐ.வி உடன் வாழ்பவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் நாதன், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக் கட்டளை தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



