பெரம்பலூர், ஆக.18: பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில்நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 மனுக்கள் பெறப் பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொது மக்கள் வழங்கிய மனுக்களின் மீது மூன்று மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களில் உடனடித் தீர்வு கண்ட அலுவலர்களை பாராட்டிய மாவட்டக் கலெக்டர் அனைத்து அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த மனுக்கள்மீது எவ்வித கால தாமதமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 508 மனுக்களை பொது மக்களிடமிருந்து மாவட்டக் கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக திருச்சி மாவட்டம், காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த செல்லபாப்பா என்பவர் பணியின்போது இறந்ததை அடுத்து வாரிசுதாரரான சங்கவி என்பவருக்கு கருணை அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையில் பதிவுறு எழுத்தர் பணிக்கான ஆணையை மாவட்டக் கலெக்டர் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுந்தர்ராமன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வாசுதேவன், தாட்கோ பொது மேலாளர் கவியரசு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



