பாடாலூர், ஆக. 10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் காரை செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீஸார் இரூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்திய போலீசார், அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த, திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சிங்கிளானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அசோக்குமார் (43)என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி, சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அசோக்குமாரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை, பாடாலூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement




