Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் டூவீலர் பார்க்கிங்க் ஆக மாறி வரும் பேருந்து நிறுத்தும் நடைமேடைகள்

பெரம்பலூர், ஜூலை 6: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனம் செய்யும் நிலையில் பேருந்து நிறுத்தும் தடங்களை இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். பெரம்பலூர் புதிய பேரூந்து நிலையத்தில் பேரூந்து நடைமேடைகள் புதிப்பிக்கப்பட்டு மேற்கூறையை புதிதாக நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இது வெயில் மற்றும் மழைகாலங்கள் பயணிகள் பேருந்துகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இருந்தது.

பயணிகள் நிற்பதற்குஇடமின்மை:

பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் நிற்கும் நடைமேடைப் பகுதிகளை இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால், பயணிகள் அமரவோ, நிற்கவோ இடமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பேருந்துகள் நடைமேடை உள்ளே வந்து நிற்கும் நுழைவுப் பகுதிகளிலும், வளைவுகளிலும் இருசக்கர வாகனங்களை அத்துமீறி நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் பேருந்துகளை நிலையத்திற்குள் திருப்புவதற்கும், தடத்தில் சரியாக நிறுத்துவதற்கும் ஓட்டுநர்கள் சிரமப்பட்டு அப்படியே வெளியே நிறுத்திவிடுகின்றனர். பேருந்துகள் தங்களுக்குரிய தடத்திற்குள் வர முடியாமல் போவதால், நிலையத்தின் மையப் பகுதியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இது பேருந்து நிலையத்திற்குள் தேவையற்ற போக்குவரத்து நெரிசலையும், விபத்து அபாயங்களையும் உருவாக்குகிறது. பேருந்து நிலையங்களில் நகராட்சி சார்பில் கட்டண வாகனக் ஸ்டாண்டு இருந்தபோதிலும், கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் சிலர், நடைமேடைகளையும் நுழைவாயில்களையும் இலவச பார்க்கிங் போல பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், \”தினமும் பணிக்குச் செல்வோர் மற்றும் கடைக்காரர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நடைமேடைகளில் நீண்ட நேரம் நிறுத்திச் செல்கின்றனர். போக்குவரத்து காவல்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து, நடைமேடைகளில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்தனர்.