கூடலூர், ஆக 13:கூடலூர் காசிம்வயல் பகுதியில், சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கவுதம் தலைமை வகித்து பேசுகையில், ‘‘குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த மற்றும் முழுமையான உணவாகும். அது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எதிர்கால ஆரோக்கியத்திற்கும் வலுவான அடித்தளமாக அமைகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உட்கொள்ள வேண்டிய சத்தான உணவு வகைகள், பராமரிப்பு முறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியமான ஆரோக்கிய வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கி, ஊட்டச்சத்து பெட்டகங்களை விநியோகித்தார். அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுஜித் கண்ணா ஒருங்கிணைத்து நடத்தினார். இதில் சுமார் 20 பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர். சமூக சுகாதார செவிலியர் செல்வி நன்றி கூறினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



