Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாயார் கால்வாயில் சிக்கி புலிக்குட்டி பலி

கூடலூர், மே 16: கூடலூரை அடுத்த மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாயார் பகுதியில் மாயார் மின் உற்பத்தி நிலையத்திற்கான நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு மசினகுடி மரவக்கண்டி அணையில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்லும் இந்த கால்வாயில் நேற்று முன்தினம் சுமார் ஒரு வயதான ஆண் புலிக்குட்டி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில், உயிரிழந்த புலிக்குட்டி மாயார் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் சிக்கி கிடந்தது.

இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் இறந்த புலிக்குட்டியின் உடலை மீட்டு நேற்று உடற்கூறாய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து புலிக்குட்டியின் முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டது. பின்னர், புலிக்குட்டியின் உடல் அப்பகுதியில் எரியூட்டப்பட்டது. தண்ணீரில் மூழ்கியதால் புலிக்குட்டி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது ரசாயன அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.