Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மசினகுடி-தெப்பக்காடு சாலையோரத்தில் குட்டியுடன் வலம் வரும் காட்டு யானை கூட்டம்

ஊட்டி,ஜூலை31: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையோரத்தில் குட்டியுடன் யானைகள் கூட்டம் வலம் வருவது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் உறைபனி காணப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் என அனைத்தும் காய்ந்து காணப்பட்டது. அவ்வப்போது காட்டுத் தீயும் ஏற்பட்டு வந்தது. இதனால், இந்த பகுதிகளில் இருந்த காட்டு யானைகள் உட்பட அனைத்து வனவிலங்குகளும் நீர் நிலைகளை தேடி சென்றன. இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் சில நாட்கள் அவ்வப்போது மழை பெய்தது.இதனால், இந்த வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

கடந்த கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டபோது உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர்ந்த யானைக் கூட்டங்கள் தற்போது முதுமலையில் பசுமை திரும்பியதால் சாலையோரங்களில் வலம் வரத் துவங்கியுள்ளன. குறிப்பாக, கூட்டம் கூட்டமாக யானைகள் முதுமலையில் உலா வரும் நிலையில், மசினகுடி-தெப்பக்காடு சாலையோரத்தில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் அடிக்கடி வலம் வருகிறது. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது அதிக அளவு யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் வாகனங்களைவிட்டு இறங்குவதால் விபத்து அபாயமும் தொடர்கிறது. இதனை கண்காணிக்க மசினகுடி முதல் தெப்பக்காடு வரையில் உள்ள சாலையில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.