நாமகிரிப்பேட்டை, ஆக. 29: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் சார்பில், நேற்று 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் நிறுவனத் தலைவர் சிவலிங்கன் தலைமை வகித்தார். முன்னதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகம் முன்பு அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ‘நாமகிரிப்பேட்டையில் நீண்ட காலமாக வசித்து வரும் எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லாத நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராடி வருகின்றனர்.
போதிய வருவாய் இல்லாததால், ஆண்டுக்கு ஒரு இடம் குடிபெயர்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் படிப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. நிரந்தரமாக வசிக்க இலவச பட்டா வழங்கக்கோரி பல முறை மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,’ என்றனர்.



