நாமக்கல், நவ.5: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மன் வேடமணிந்து வந்த பெண், கலெக்டரிடம் மனு அளித்தார். நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்தவர் புவனேஸ்வரி (43). இவர் நேற்று, அம்மன் வேடமணிந்து, கையில் வேலுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர், கலெக்டர் உமாவிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவின் விபரம்: வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன்.
எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். எங்கள் பகுதியில் வசிக்கும் சிலர், ரோட்டில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் தொடர்ந்து செய்கிறார்கள். அவர்களை தட்டிக்கேட்டதால் என்னையும், என் குடும்பத்தையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். இதுகுறித்து, மோகனூர் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடன் வாங்கி வீடு கட்டினோம்.
இதற்கு மாத தவணை செலுத்துகிறோம். தொடர்ந்து, பிரச்னை செய்வதால் தொழில் செய்ய முடியாமல், வருமானம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், எங்களால் வாழ முடியாது. எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


