Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குண்டுமல்லி கிலோ ரூ.360க்கு விற்பனை

சேந்தமங்கலம், ஜூலை 30: எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி விலை உயர்ந்து கிலோ ரூ.360க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நவலடிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, காவக்காரன்பட்டி, முத்துகாப்பட்டி, பழையபாளையம், கோம்பை, போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். கொல்லிமலை அடிவாரத்தில் விளையும் பூக்கள் நன்கு திரட்சியாக மணம் மிகுந்திருப்பதால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும், இப்பகுதி விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து பூக்களை பறித்து நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.எருமப்பட்டி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.280 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

ஆடி மாதம் கோயில்களில் விசேஷங்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் கிலோ ரூ.320 வரை உயர்ந்தது. நேற்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.360க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `எருமப்பட்டி வட்டார பகுதியில் வெயிலின் தாக்கத்தால், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆடி மாதம் என்பதால் கோயில்களில் விசேஷங்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், வரத்து சற்று குறைந்து வருவதால், விலை உயரத் தொடங்கியுள்ளது,’ என்றனர்.