Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.1000 உயர்வு

சேந்தமங்கலம், மே 22: சேந்தமங்கலம் வட்டாரத்தில், மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, கோவிந்தம்பாளையம், மின்னாம்பள்ளி, சர்க்கார் உடுப்பம், குளத்துப்பாளையம், சேந்தமங்கலம் வட்டார பகுதியான பேளூக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், இதே போல கொல்லிமலை வட்டார பகுதியில் மரவள்ளியை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை, வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர். சேகோ பேக்டரி உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவு சத்து புள்ளி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

விலை உயர்வின் காரணமாக, தற்போது இப்பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிகளில் ஜவ்வரிசி உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக மரவள்ளி கிழங்குகளை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளை மரவள்ளிக் கிழங்கு ஒரு டன் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது ரூ.1000 விலை உயர்ந்து ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முள்ளுவாடி மரவள்ளிக்கிழங்கு ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆயிரம் விலை உயர்ந்து. ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு விலை, கடந்த வாரம் ஒரு டன் ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ஆயிரம் உயர்ந்து ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், `தற்போது ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் மரவள்ளி கிழங்கு தேவை அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் மரவள்ளி கிழங்கு அறுவடை நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், விலை உயர்ந்து வருகிறது,’ என்றனர்.