Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

நாமக்கல், ஜூலை 21: சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் ஆபீசு முன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, அரூர் மற்றும் என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 883 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், திட்டத்தை ரத்து செய்யக் கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன், தண்டபானி, பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு, விவசாய நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், `சிப்காட் திட்டத்திற்காக போடப்பட்ட அரசாணையை, உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு 300 விவசாயிகளின் 485 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அந்த நிலங்களை விற்பனை செய்யவோ, அந்த நிலத்தை காட்டி விவசாயத்திற்கு வங்கியில் கடன் பெறவோ முடியாத நிலை உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து தொழிற்பேட்டை அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,’ என்றார்.