Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் கடும் வறட்சியால் காய்ந்து வரும் ஏரி, குளங்கள்

நாமக்கல், ஜூலை 20: நாமக்கல் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு சம்பா சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், விவசாய பணிகள் முடங்கி, மாவட்டமே கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. முக்கிய ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தூசூர் ஏரி, நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரியை மட்டுமே நம்பி சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தூசூர் ஏரி மட்டுமின்றி, அதற்கு நீர்வரத்து அளிக்கும் பெரியகுளம் ஏரி, பொம்மசமுத்திரம் ஏரி மற்றும் துத்திக்குளம் ஏரி போன்ற முக்கிய நீர்நிலைகளும் தூர்ந்து போனதால், இப்பகுதிகளில் பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்வது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் 5ம் தேதியே தொடங்க வேண்டிய பருவமழை, ஜூலை இறுதி வரை பெய்யாதது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை கைகொடுக்காத நிலையில், காவிரி ஆற்றையும் நம்பி இருந்த விவசாயிகள், மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் ராஜா வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைக்காமல், சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், நிலைமை சீராகவில்லை. மழை பொய்த்ததன் காரணமாக, மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு வாரம்தோறும் பெண்கள் காலி குடங்களுடன் வருவது அதிகரித்துள்ளது.

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிநாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், `கடும் வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும். இதன் மூலம், வருங்காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து, ஏரிகளை நிரப்ப முடியும். எந்த ஆண்டும் இல்லாத வகையில், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 80க்கும் மேற்பட்ட ஏரிகளும் வறண்டு நீரின்றி காணப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றார்.