Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு சுய விவரங்கள் பதிவு

நாமக்கல், ஜூலை 18: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான சுய விவரங்கள் பதிவு செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் சென்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி, ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. வலுவான கொள்கை உருவாக்கவும், நீண்டகால செயல்திட்டங்களை வகுக்கவும், துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும்.

இந்த வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் முதற்கட்டமாக, சுய கணக்கெடுப்புக்கான காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை வீட்டின் வசதிகள் குறித்த அடிப்படைத் தகவல்களை, பொதுமக்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டரும், முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலருமான மதுபாலன், நேற்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 சுய கணக்கெடுப்பில் இணைய தளம் மூலம் தனது தரவுகளை பதிவேற்றம் செய்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும், தங்கள் செல்போன் அல்லது கம்ப்யூட்டரில் https://se.census.gov.in என்ற இணையதள முகவரியில், தங்களது மாநிலத்தை தேர்வு செய்து Captcha உள்ளீடு செய்தபின் செல்போனுக்கு வரும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, உள்நுழைவு செய்யலாம். பின்னர் மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் முக்கிய நில அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.

திரையில் தோன்றும் வரைபடத்தை நகர்த்த இரண்டு விரல்களால் தடவி தங்களது வீட்டை தேர்வு செய்யலாம். அதை உறுதிப்படுத்திய பின்னர், சேமிக்க மற்றும் அடுத்து என்பதை தேர்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின் சென்சஸ் வீட்டு விவரங்கள் என, அதில் கேட்கப்பட்டுள்ள 33 கேள்விகளுக்கு தங்களின் வீடு குறித்த தகவல்களை பதிவு செய்து பின்னர் பதிவேற்றம் செய்யலாம். எனவே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது வீட்டின் வசதிகள் குறித்த துல்லியமான தகவல்களை பிழையின்றி பதிவு செய்த பின் பதிவேற்றம், செய்து மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.