நாமக்கல், ஆக.10: நாமக்கல்லில் நடைபெற்ற டூவீலர் திருட்டு வழக்கில் தொடர்புடைய, திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுவனை, கடந்த இரு தினங்களுக்கு முன், நாமக்கல் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில், சிறுவனை அடைக்க எஸ்எஸ்ஐ பாபு, ஏட்டு லோகநாதன் ஆகியோர் பஸ்சில் சேலம் அழைத்துச் சென்றனர்.
கூர்நோக்கு இல்லம் அருகில் சென்ற போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறிய சிறுவன், திடீரென போலீசார் இருவரையும் தள்ளி விட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரும், அந்த சிறுவனை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார், சேலம் கன்னங்குறிச்சி போலீசாரிடம் புகார் அளித்தனர். சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தப்பியோடியது குறித்து, மாவட்ட எஸ்பி யாதவ் கிரிஷ் அசோக், எஸ்எஸ்ஐ பாபு, ஏட்டு லோகநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.



