Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண் கடத்திச்சென்ற டிராக்டர் மோதி மின்கம்பங்கள் சேதம்

நாமகிரிப்பேட்டை, ஜூன் 9: நாமகிரிப்பேட்டை அருகே மண் கடத்திச்சென்ற டிராக்டர் மோதி 2 மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில், மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், நாகிரிப்பேட்டை அடுத்த சின்ன காக்காவேரி ஏரியில் இருந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் மண் கடத்திச் செல்கின்றனர். அப்போது, டிராக்டர்களை வேகமாக ஓட்டிச்செல்லும்போது, சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று டிராக்டரில் மண் ஏற்றிக்கொண்டு அவசர கதியில் சென்றுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஏரிக்கரையோரத்தில் உள்ள 2 மின் கம்பங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததால், அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் சின்ன காக்காவேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகினர். இதுகுறித்த தகவலின்பேரில், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி, மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `ஏரிகளில் நடைபெறும் சட்டவிரோத மண் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல், அதிவேகமாக டிராக்டரை இயக்கி அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.