பரமத்திவேலூர், ஆக. 5: பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலையில் வடமாநில தொழிலாளி ஒருவரை, 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோனில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோஷன்(19) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கபிலர்மலையில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்க நண்பர்களுடன் சென்ற ரோஷன், சந்தைக்கு செல்லும் வழியில் எதிரே வந்த மற்றொரு பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் மீது எதிர்பாராத விதமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், ரோஷனை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரப்பு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் விலக்கி சமாதானப் படுத்தினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த ரோஷனை, அவருடன் வந்த நண்பர்கள் மீட்டு கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இந்த சம்பவத்தால் கபிலர்மலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் ரோஷன தாக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பணிகளிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று கபிலர்மலை சந்தை பகுதியில் ஒருதரப்பினர், பீகார் மாநில வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


