நாகப்பட்டினம், மே 7: கோடைகால விடுமுறையால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். நாகப்பட்டினம் நகர பகுதியில் அமைந்துள்ள சிறப்பான பொழுது போக்கு தலம் புதிய கடற்கரை ஆகும். இந்த புதிய கடற்கரைக்கு தினந்தோறும் ஏராளமான நாகப்பட்டினம் நகர பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தோடு வந்து செல்வார்கள்.
கோடைக்காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நாகப்பட்டினம் புதிய கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் புதிய கடற்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான பொருட்கள் சேதமடைந்துள்ளது. அதே போல் அங்குள்ள குழந்தைகள் பூங்கா பராமரிப்பு இல்லாமல் மூடியுள்ளது. எனவே கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வருகை தரும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து அழிஞ்சமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா கூறுகையில், நாகப்பட்டினம் நகர பகுதியை ஒட்டியுள்ள சிறந்த சுற்றுலா தலம் புதிய கடற்கரை ஆகும். இதனால் நாகப்பட்டினம் நகர பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி அருகில் வசிப்பவர்களும் தங்களது குடும்பத்தோடு மாலை நேரங்களில் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கிறது.
கோடை விடுமுறை காலங்களில் வீடுகளில் குழந்தைகள் முடங்கி கிடந்தால் செல்போன் பார்த்து தங்களது அறிவை மங்கி செய்வார்கள் என்பதற்காக வெளி உலகத்திற்கு பெற்றோர்கள் அழைத்து வருகின்றனர். அதிலும் இது போன்ற இயற்கை சூழ்நிலை நிறைந்த இடத்திற்கு அழைத்து வந்தால் குழந்தைகளின் மனநிலை இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடையும். ஆனால் கோடைகாலத்தில் பராமரிப்பு செய்ய வேண்டிய சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கிறது.
அதே போல் கடற்கரையில் சிறுவர்கள் விளையாடும் சாதனங்களும் சமூகவிரோதிகளால் சேதமடைந்து உள்ளது. எனவே கோடைகால விடுமுறையை கொண்டாட வரும் குழந்தைகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்றார்.



