கொள்ளிடம், மே 7: கொள்ளிடம் வருக புதுமண்ணி ஆற்றின் கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து கடுக்காமரம், குன்னம்,பெரம்பூர் வழியாக வடரங்கம் செல்லும் நெடுஞ்சாலையில் புத்தூர் மதகடியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு புது மண்ணியாற்றின் கரையில் உள்ள நெடுஞ்சாலையில் ஆற்றின் கரையையொட்டி சாலையோரம் எந்த தடுப்புச் சுவரும் இல்லாமல் இருந்து வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறி வாய்க்காலுக்குள் விழும் ஆபத்தான நிலை உள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த சாலை வழியே சுமை ஏற்றி சென்ற ஒரு லாரி சாலை ஓர வாய்க்காலுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். இரவு நேரங்களில் இந்த சாலை வழியே நடந்து செல்லும் ஆண், பெண் முதியோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் தொடர்ந்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு தடுப்புச் சுவர் இல்லாமல் அப்படியே இருந்து வருகிறது. பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலையை தவிர்க்க இங்கு உடனடியாக தடுப்புச் சுவரோ, அல்லது வாகனங்கள் பாசன வாய்க்காலுக்குள் விழாத வகையில் உலோகத்தினால் ஆன தடுப்பு பலகையோ அமைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதான தெற்கு ராஜன் வாய்க்கால் பாசதாரர் சங்க நிறுவனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.



