வேதாரண்யம், மே 7: வேதாரண்யம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது காலை 8.15 மணி முதல் மழை கொட்டி தீர்த்தது. அக்னி நட்சத்திரம் துவங்கி கடும் வெயிலால் பாதித்த மக்கள் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி ,தோப்புத்துறை நெய் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் நல்ல மழை பெய்தது. கடந்த 15 தினங்களாக வழக்கத்துக்கு மாறாக, கடும் வெயில் தாக்கத்தில் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
மேலும் அக்கினி நட்சத்திரம் துவங்கிய நாளில் இருந்து மிகக் கடுமையான வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் இருந்த மக்களுக்கு வரப் பிரசாதமாக வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் உப்பள பகுதியில் உப்பு எடுக்கும் பணி மட்டும் பாதித்துள்ளது. இந்தக் கோடை மழையினால் கோடை சாகுபடியான கடலை, சவுக்கு, மா, தென்னை, முந்திரி மற்றும் காய்கறி சாகுபடிக்கு ஏற்ற மழை என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



